அடுத்தவரை பார்த்து வணக்கம் சொல்லும் முறை இந்திய துணைக் கண்டத்திற்கே அதுவும் தமிழ் கலாச்சாரத்திற்கே சிறப்பாக அமைந்த குணம். அவர் நம்மை விட ஏழையானாலும், எளியவரானாலும், படிப்பு மற்றும் பிற தகுதிகளில் குறைந்தவராயினும் அவருக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்பது நம் மரபு. வணக்கம் வெறும் வார்த்தையாக இராமல் இரண்டு கைகளை முன்புறம் குவித்து தலையை சிறிது தாழ்த்தி சொல்ல வேண்டும். ஏனெனில் எதிரில் இருப்பவர் சாதாரண மனிதராயினும் அவருள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் வசித்துக்கொண்டிருக்கிறான். நாம் வணக்கம் தெரிவிப்பது அந்த பரமாத்மாவுக்கே என்பது நம் மரபு. அத்தகைய வணக்கத்தில் காலை மாலை என்பதெல்லாம் இல்லை. வெறும் வணக்கம் அல்லது நமஸ்காரம் அல்லது நமஸ்தே சொன்னால் போதுமானது. இத்தகைய ஒரு அறிய தத்துவத்தை அந்நிய மோகம் கொண்டு வெள்ளைக்காரன் ஸ்டைலில் நாம் கூறுவது சரியா?
வெள்ளைக்காரன் குட் மார்னிங் என்று சொல்லுகிறான். இந்த காலை நல்லது என்பது அதன் பொருள். அவன் நாடு குளிர் நாடு. சூரியனை காண்பது குதிரை கொம்பு. நம்மைப்போல வருடத்திற்கு ஆறு பருவ காலங்கள் என்பதெல்லாம் அவனுக்கு கிடையாது. சுறுசுறுப்பு என்பது அங்கு எப்போதாவதுதான் வெளிப்படும்.ஆகவே குட் மார்னிங் என்று அடுத்தவரை கூறி உற்சாக படுத்தி காரியத்தை முடித்து கொள்வார்கள். இதில் அவர்களில் காரியவாதம் தான் தெரிகிறதே ஒழிய அடுத்தவருக்கு மரியாதை பரமாத்மாவுக்கு வணக்கம் போன்ற சிந்தனைகள் இல்லை. இப்படி பட்ட ஒரு காரியத்தை நாம் காபி அடித்தால் அது நம்முடைய சுய சிந்தனையை அடகு வைத்தது போலல்லவா இருக்கிறது. சுயமாக சிந்திப்பதும் நம்முடைய பாரம்பரியத்திற்கு மரியாதை தருவதும் நாம் அடுத்தவரை கேட்டா தெரிந்து கொள்ளவேண்டும். அது பிறப்பிலேயே வர வேண்டாமா? இனி அடுத்தவரை சந்திக்கும்பொழுது நம் தூய தமிழிலேயே "வணக்கம்" என்று கூறுங்களேன்.
No comments:
Post a Comment