Saturday, June 25, 2011

காலை மாலை வணக்கங்கள்!

சமீப காலங்களில் தமிழர்களிடையே பரவி வரும் ஒரு வித்தியாசமான நோய் இது. நோய்க்கு காரணம் மேல்நாட்டு மோகமும் ரத்தத்துடன் கலந்து விட்ட அடிமைத்தனமும்தான். அந்த நோயாவது, அடுத்தவரை கண்டால் வணக்கம் கூறுவதற்கு பதிலாக "காலை வணக்கம்" "மாலை வணக்கம்" என்று கூறுவதுதான். ஆங்கிலத்தில் Good Morning, Good Evening என்று சொல்கிறோமே அதை இவர்கள் தமிழில் கூறுவதாக எண்ணி நம்முடைய வணக்க முறையையே கேலி கூத்தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கூறுவதை தமிழில் கூறினால் நல்ல காலை, நல்ல மாலை என்று தான் பொருள் தர முடியும். ஆங்கிலம் வினோத மொழி. அதை நம் கலாச்சாரத்துடன் கலந்து விட்ட தமிழில் தருவதென்றால் தர்ம சங்கடம்தான். உதாரணமாக துக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையை ஆங்கிலத்தில் Good Friday என்கிறார்கள். இதை நாம் நல்ல வெள்ளி என்றா நம் மொழியில் சொல்லுகிறோம். இல்லையே. தூய வெள்ளி என்கிறோம். மலையாளிகள் இன்னும் சிறப்பாக துக்க வெள்ளி என்பார்கள். அப்படித்தான் பொருளறிந்து மொழியாக்கம் செய்ய வேண்டும். இனி காலை/மாலை வணக்கத்துக்கு வருவோம். 

அடுத்தவரை பார்த்து வணக்கம் சொல்லும் முறை இந்திய துணைக் கண்டத்திற்கே அதுவும் தமிழ் கலாச்சாரத்திற்கே சிறப்பாக அமைந்த குணம். அவர் நம்மை விட ஏழையானாலும், எளியவரானாலும், படிப்பு மற்றும் பிற தகுதிகளில் குறைந்தவராயினும் அவருக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்பது நம் மரபு. வணக்கம் வெறும் வார்த்தையாக இராமல் இரண்டு கைகளை முன்புறம் குவித்து தலையை சிறிது தாழ்த்தி சொல்ல வேண்டும். ஏனெனில் எதிரில் இருப்பவர் சாதாரண மனிதராயினும் அவருள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் வசித்துக்கொண்டிருக்கிறான். நாம் வணக்கம் தெரிவிப்பது அந்த பரமாத்மாவுக்கே என்பது நம் மரபு. அத்தகைய வணக்கத்தில் காலை மாலை என்பதெல்லாம் இல்லை. வெறும் வணக்கம் அல்லது நமஸ்காரம் அல்லது நமஸ்தே சொன்னால் போதுமானது. இத்தகைய ஒரு அறிய தத்துவத்தை அந்நிய மோகம் கொண்டு வெள்ளைக்காரன் ஸ்டைலில் நாம் கூறுவது சரியா? 

வெள்ளைக்காரன் குட் மார்னிங் என்று சொல்லுகிறான். இந்த காலை நல்லது என்பது அதன் பொருள். அவன் நாடு குளிர் நாடு. சூரியனை காண்பது குதிரை கொம்பு. நம்மைப்போல வருடத்திற்கு ஆறு பருவ காலங்கள் என்பதெல்லாம் அவனுக்கு கிடையாது. சுறுசுறுப்பு என்பது அங்கு எப்போதாவதுதான் வெளிப்படும்.ஆகவே குட் மார்னிங் என்று அடுத்தவரை கூறி உற்சாக படுத்தி காரியத்தை முடித்து கொள்வார்கள். இதில் அவர்களில் காரியவாதம் தான் தெரிகிறதே ஒழிய அடுத்தவருக்கு மரியாதை பரமாத்மாவுக்கு வணக்கம் போன்ற சிந்தனைகள் இல்லை. இப்படி பட்ட ஒரு காரியத்தை நாம் காபி அடித்தால் அது நம்முடைய சுய சிந்தனையை அடகு வைத்தது போலல்லவா இருக்கிறது. சுயமாக சிந்திப்பதும் நம்முடைய பாரம்பரியத்திற்கு மரியாதை தருவதும் நாம் அடுத்தவரை கேட்டா தெரிந்து கொள்ளவேண்டும். அது பிறப்பிலேயே வர வேண்டாமா? இனி அடுத்தவரை சந்திக்கும்பொழுது நம் தூய தமிழிலேயே "வணக்கம்" என்று கூறுங்களேன்.   

No comments:

Post a Comment